சனி, 20 ஆகஸ்ட், 2011

பசுமை - ஜெயமோகன்!

தமிழ்நாட்டின் எழுத்தாளர்களின் முக்கியமானவரும், எனது நேசிப்புக்குரியவருமான ஜெயமோகன் அவர்களுக்கு, நான் எழுதிய கடிதத்தை, தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார். அதன் மூலம் ஏராளமான நண்பர்கள் எனது வலைப்பூவுக்கு வந்து செல்கிறார்கள். புதிய நட்புகளும் உருவாகியுள்ளன. தமிழின் முன்னோடி எழுத்தாழுமை எனது பணியை பாராட்டிய தருணம், என் வாழ்வில் மகத்தானது.
இதோ அந்த கடிதம்....


அன்பு ஜெயமோகன்!

பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இணையத்தில் உலா வரும் எல்லா இளைஞர்கள் போலவே, எங்கோ சுற்றி அலைந்து, கடைசியில் உங்களிடம் வந்து சேர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

ஆன்மீகம் முதல் அரசியல் வரை தாங்கள் தொட்டுக்காட்டும் அத்தனை விஷயங்களும் வாசகனுக்கு ஞானத் தெளிவை ஏற்படுத்துகின்றன. வேளாண் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட மசானோபு ஃபுகோக்காவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ பற்றித் தெரியாது. ஆனால், ஃபுகோக்காவின் இயற்கை வேளாண்மை பற்றிய தங்களின் பதிவு அருமை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


சரி, விஷயத்திற்கு வருவோம். தங்களின் ‘தேர்வு செய்யப்பட்ட சிலர்’ கட்டுரையை வாசித்த போது, எனக்குப் பெண் தேடும் படலம் நடந்து கொண்டு இருந்தது. வேடந்தாங்கல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், பெண்ணைப் பார்த்தேன். அழகும், அறிவும்… கொண்டவர். ஆனால், இடது கால் போலியாவல் பாதிக்கப்பட்டதால் தாங்கித் தாங்கி நடக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு நீங்கள் நித்யா சொன்னதாக எழுதிய வரிகளே நினைவுக்கு வந்தது.(பல வருடங்களுக்கு முன் நித்யாவிடம் ஓர் இளம்பெண் வந்து அவளுக்குக் கண் தெரியாதைச் சொல்லி வருந்தினாள். நித்யா ஆறுதல் ஒன்றும் சொல்லவில்லை. ‘நாட்டிலே பல லட்சம்பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். கண் தெரியாததைப்போய்ப் பெரிய பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே’ என்றார்.அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அந்த வரி மாற்றியது. அந்தப்பெண் இன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். கணிதத்தில் ஆராய்ச்சி செய்கிறார்.)

எங்கள் வீட்டில் பலரும் ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம் சாந்தப்படுத்த உங்கள் எழுத்துக்களே உதவியது. வரும் செப்டம்பர் 16 -ம் தேதி செங்கல்பட்டு நகரில் திருமணம் நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தலைமை தாங்குகிறார். தங்களது வாழ்த்துக்களும் எங்களுக்குத் தேவை.

மேலும், பத்திரிகைத் துறையில் நான் சந்தித்த சுவையான நிகழ்வுகளை எனது http://sannachi.blogspot.com/வலைப்பூவில் எழுதி வருகிறேன். ஒரு முறை அதை எட்டிப் பார்த்தால் மகிழ்வேன்.
நேசத்துடன்,
பொன்.செந்தில்குமார்



அன்புள்ள செந்தில்குமார்

நான் தொடர்ச்சியாகக் காசுகொடுத்து வாங்கிப்படிக்கும் ஒரே இதழின் ஆசிரியராக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி அளித்த கடிதம். மானசீகமாக எப்போதுமே விவசாயியாக இருக்கிறேன் என்பதனால் இயற்கை விவசாயம் மேல் எப்போதுமே ஆர்வமுண்டு.

உங்கள் இணையதளம் மிக நன்றாக உள்ளது. நம்மாழ்வார், அண்ணாஹசாரே போன்ற மனிதர்களைப் பற்றிய நேரடிப் பழக்கத்தை எழுதியிருப்பதை விரும்பி வாசித்தேன். முக்கியமான பணி. குறிப்பாக வீடுதோறும் தத்துவஞானிகள் என்ற கட்டுரை. நம்முடைய மண்ணில் விவசாயிகள் அவர்களின் வாழ்க்கையினூடாகவே கனிந்து மலர்வதை எப்போதுமே கண்டுகொண்டிருக்கிறேன். அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் நம்முடைய பெரும் செல்வம்.

உங்கள் மணவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சந்திப்போம். என் வாழ்த்துக்களை மனைவிக்குத் தெரிவியுங்கள்.

ஜெ

செவ்வாய், 7 ஜூன், 2011

தற்கொலைக்கு துணிந்த அண்ணா ஹஜாரே...!




அண்ணா ஹஜாரே சந்திப்புக் குறித்து, மேலும் எழுதுங்கள் என்று நண்பர்கள் வட்டத்தில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஏறத்தாழ ஹஜாரே குறித்த எனது முதல் பதிவு வெளியான போது அனைத்து ஊடகங்களிலும் அவர்தான் செய்தியாக இருந்தார். மேலும் என் மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணன் அவர்களும், ஹஜாரே பற்றி விரிவாகவே எழுதி வந்தார். கூடவே, எங்கள் ஆனந்த விகடன் இதழிலும் குறுந்தொடர் வெளியானது. ஆகையால், சற்று பொறுத்திருந்த எழுத நினைத்தேன். அதனால்தான் இந்த இடைவெளி...
அண்ணா ஹஜாரேவை ஊடகம் வாயிலாகவும் அறிந்து கொள்வது என்பது, விரிந்து கிடக்கும் கடலை, பாட்டிலில் அடைத்து பார்ப்பதற்கு சமம். அவருடைய அருகாமையில் அனுதினமும் நடக்கும் நிகழ்வுகள் ஆச்சயர்த்தையே ஏற்படுத்தும். வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் ஹஜாரே சிறிது நேரம் வழிப்பாட்டுக்கு செலவிடுகிறார். ராலேக்கண் சித்தி கிராமத்தில் உள்ள யாதவ பாபா கோயிலில் ஒரு சிறிய அறை உள்ளது. இறை சிந்தனை அதிகமாக இருக்கும்போதும், மவுன விரதம் இருக்கும் சமயத்திலும் இங்குதான் தங்குவார். மற்ற நாட்களில் பயிற்சி மையத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் உள்ள தனது அறையில் இருப்பார். நான் அங்கிருந்த நாட்களில் பெரும்பாலும் விருந்தினர் விடுதியில்தான் இருந்தார். எப்படி பார்த்தாலும் காலை 6 மணிக்கு வெளியில் கிளம்பி விடுவார். நானும் அவருடன் ஒட்டிக் கொண்டு சென்றுவிடுவேன். எங்கு, எதற்கு செல்கிறார் என்று தெரியாது. வாகனம் ஒரு நாள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும், மற்றோரு நாள் மரக்கன்று நடப்படும் பகுதிக்கு செல்லும், இன்னோரு நாள் கிணறு வெட்டப்படும் இடத்திற்கு போகும். இப்படி எங்காவது நிர்மானப் பணிகள் நடக்கும் இடத்திற்கே வண்டி செல்லும்.
எனக்கும், அவருக்குமான உரையாடல் குறைவாகவே இருக்கும். இதற்கு இரண்டு காரணம் உண்டு. அவருக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவராது. எனக்கு இந்தி கொஞ்சம் பஞ்சம். தேவையான போது தகவலை பெற மட்டுமே இந்தியை கருமி போல பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் எந்த விதத்திலும் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்பட்டதில்லை. ஹஜாரே, காலையில் வேலை நடக்கும் இடத்தில் போய் நின்றவுடன், ‘அதை செய், இதை செய்....’ என்ற உத்தரவு கூட போடமாட்டார். அங்கு நடக்கும் பணிகளை கூர்ந்து கவனித்து வருவார். தேவைப்பட்டால் மட்டுமே ஆலோசனை வழங்குவார். சரியாக காலை 8.30 மணிக்கு கார் டிரைவரை அழைத்து, பயிற்சி மையத்தில் உள்ள உணவு விடுதிக்கு காலை உணவுக்கு என்னை அழைத்துச் செல்ல சொல்வார். காலை உணவு நம்மூர் போல வித, விதமாக இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்துதான் போக வேண்டும்.



அவல் உப்புமா, சமோசா... என்று இதில் ஏதாவது ஒன்றே காலை உணவாக இருக்கும். ஆனால், அதுவே, அங்கு அமுதம் போல இருக்கும். உணவு முடிந்து திரும்பிய உடன் மீண்டும், மதியம் 1 மணிக்கு என்னை சாப்பிட அழைத்துச் செல்ல சொல்வார். மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள், சமூக சேவகர்கள் அவரைத்தேடி வந்துவிடுவார்கள். உரையாடல் இரவு எட்டு மணி, பத்து மணி வரை கூட நீளும். அதன் பிறகே அன்றைய உணவு அவர் முன்பு வரும். ராலேக்கண் கிராமத்தில் விளைந்த கோதுமை அல்லது சோள ரொட்டியும், கொண்டை கடலை குருமாவும்தான் இருக்கும். நான் அங்கிருந்த நாட்களில் இதுதான் வாடிக்கை. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை அறிந்த நண்பர்கள் பதட்டப்பட்டார்கள். பத்து நாட்கள் கூட அவர் தாக்குபிடிப்பார் பயப்பட வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு காரணம் அவரது உணவு பழக்க வழக்கம்தான். ராலேக்கண் சித்தியில் உள்ளவர்கள் மூன்று வேளையும், ரொட்டி உண்பதற்கு காரணம் ஹஜாரேதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய தடுப்பணைகளும், கால்வாய்களும்தான் இன்று ராலேக்கண் சித்தியை பசுமையாக்கி வைத்திருக்கிறது. இன்று நாடே போற்றும் வகையில் உயர்ந்து நிற்கும் ஹஜாரே, ஒரு காலத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர் என்றால் ஆச்சயர்மாகத்தான் இருக்கும். 1965 ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போது, ராணுவ வாகனத்தில் டிரைவராக ஹஜாரே பணி புரிந்துள்ளார். போர் கடுமையாக இருந்த போது, காஷ்மீர் பகுதியில் உள்ள முகாமுக்கு உணவு ஏற்றிக் கொண்டு செல்கிறார். இவருக்கு முன்னாள் சென்ற வாகனம் கன்னி வெடியில் தாக்கப்படுகிறது. சில அடி தூரத்தில் நடந்த இந்த சம்பவம் ஹஜாரேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடுத்து, சில நாட்களில்... அவரது நெருங்கிய நண்பர் ஜெயராமன் (தமிழ்நாட்டுக்காரர்) என்ற ராணுவ வீரருடன் பேசிக் கொண்டு இருக்கிறார்.அப்போது எதிரிகள் வீசிய குண்டு விழுந்து, ஜெயராமன் உயிர் இழந்து விடுகிறார். அருகே இருந்த ஹஜாரேவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு சம்பவங்களிலும் ஹஜாரே உயிர் இழக்க அதிக வாய்ப்பு இருந்தன. கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்து போகும் உயிருக்காக ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. போர் முடிந்த பிறகு நல்ல நாள் பார்த்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்கிறார். கடைசியாக டில்லியை சுற்றிப்பார்க்க விரும்பி, டெல்லி ரயில் நிலையம் வருகிறார். அங்கிருந்த கடையில் ஒரு புத்தகம் அவர் கண்ணை கவர்ந்து இழுக்கிறது. உடனே, அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க தொடங்குகிறார். சிறிது நேரத்தில் எல்லாம் அவரது தற்கொலை திட்டம் தவிடு பொடியாகிறது. அவரை சுண்டி இழுத்தது விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற புத்தகம்தான். ‘‘மனித வாழ்வு என்பதே சக மனிதர்களிடம், அன்பு காட்டுவதும், அவர்களுக்கு உதவி செய்வதும்தான்...’’ என்ற வரிகள் ஹஜாரேவை உலுக்குகிறது. இனி என் வாழ்வு மனித குல சேவைக்கே என்று முடிவு செய்கிறார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறார். இன்னும் 4 ஆண்டுகள் பணி செய்தால்தான் ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்கிறார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்கிறார். ஆனால், அந்த 4 ஆண்டுகள் அவருக்கு 40 ஆண்டுகள் போல இருந்திருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தவுடன், திருமணம் செய்வதில்லை என்று உறுதி பூண்டுவிடுகிறார். ஆனால்,ஹஜாரே சும்மா இருந்தாலும் ஹார்மோன் சும்மா இருக்குமா? இராணுவத்தில் விழா நடந்தால் படை வீரர்கள் மனைவியுடன் கலந்து கொள்வது வழக்கம். அப்போது, அழகான பெண்களை பார்த்தவுடன் அவரது மனம், தடுமாறுமாம்.அந்த சமயத்தில் விவேகானந்தர், காந்தி... போன்றவர்களின் சிந்தனையை உள்வாங்கி, அவற்றை கடந்து வந்திருக்கிறார். ஒரு முறை ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை ?என்று கேட்ட போதுதான் இந்த கதையை சொன்னார் ஹஜாரே. தன்னுடைய கதையை சொல்லி முடித்த பிறகு ‘‘என்னுடைய அந்த சூழ்நிலைக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், என்னை யாரும் பின்பற்ற வேண்டாம்’’ என்றவர் ‘‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’’ என்றார். இல்லை என்றேன். ‘‘கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள். மக்கள் பணி செய்ய வருபவர்கள், அவர்களுக்கு தக்கப்படி வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள வேண்டும். இதனால், வீணான மன சஞ்சலமும் ஏற்படாது. சேவை உள்ளம் கொண்ட மனைவியால் கூடுதலாக பணி செய்யவும் முடியும்’’ என்று அனுபவ அறிவுரை வழங்கினார் அண்ணா ஹஜாரே.
-இன்னும் சொல்வேன்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நான் சந்தித்த அண்ணா ஹஜாரே-1


இந்திய ஊடகம் மட்டுமல்லாமல், உலக ஊடகங்களும் அண்ணா ஹஜாரேவின் புகழ்பாடுகின்றன. கார்ப்பிரேட் கம்பெனியின் சி.இ.ஓ முதல் கல் உடைக்கும் தொழிலாளி வரை அண்ணா ஹஜாரே பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அடுத்த ஜனாதிபதியாக கூட அவரை தேர்வு செய்தாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை. உலகம் இந்த மா மனிதரை அறிந்து கொள்ள துடிக்கிறது. அந்த எளிய மனிதருடன், அடியேன் உண்டு, உறங்கிய அனுபவத்தை ‘கிராம ராஜீயம்’ என்ற தொடர் கட்டுரையாக பசுமை விகடன் இதழில் எழுதினேன். அந்த காலக்கட்டத்தில் ‘‘யாரோ வடநாட்டுக்காரனை பத்தி பக்கம், பக்கமா எழுதி என்ன பிரயோஜனம்?’’ என்று தமிழ்நாட்டு பிரகஸ்கதபதிகள் என்னை தூற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு அப்போதுதே தெரியும் உலகம் ஒரு நாள் அவரைக்
கண்டுகொள்ளும் என்று.
சரி, முதன் முறையாக அண்ணா ஹஜாரேவை, எங்கு, எப்படி சந்தித்தேன்....
நான்கு ஆண்டுகளுக்கு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சமூக சேவகர் அண்ணா ஹஜாரே பற்றிய புத்தகம் ஒன்றை மொழியாக்கம் செய்துள்ளோம். இதை விகடன் பதிப்பகம் வெளியிட வேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள்’’ எதிர் முணையில் பேசியவர் அப்போதைய காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். கருணாகரன் கேட்டுக் கொண்டார். உடனே, அப்போது ஆனந்த விகடன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கே.அசோகன் அவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தேன். துணைவேந்தர் கருணாகரன், இதற்கு முன்பு ஐ.ஐடியில் பேராசிரியர், மத்திய பிரதேச பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர்... என்று பல இடங்களில் உயரிய பொறுப்புகளை வகித்தவர். துணைவேந்தர் குறித்தும், அண்ணா ஹஜாரேவை பற்றியும் ஆசிரியரிடம் சுருக்கமாக சொன்னேன். அடுத்த ஒரு வாரத்தில் துணைவேந்தர் கருணாகரன் ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு (அப்போது கிரீம்ஸ் சாலையில் இருந்தது) வருகை தந்தார். துணைவேந்தரை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அடுத்த சில மாதங்களில் அண்ணா ஹஜாரேவின் ‘எனது கிராமம், எனது மண்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது. சுற்றுச்சூழல் போராளி ஈரோடு ஜீவானந்தம் தமிழாக்கம் செய்திருந்தார். இந்த புத்தகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மராத்தி மொழியில் அண்ணா ஹஜாரே எழுதியிருந்தார். இந்த புத்தகம் எழுதுவதற்கு அவர் கன்னியாக்குமரி வந்து ஒரு மாதம் தங்கியிருந்து எழுதியிருக்கிறார். அடுத்து, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகம் அண்ணா ஹஜாரேவிற்கு சிறப்பு டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளதை தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது. துணைவேந்தர் கருணாகரன், மத்தியபிரதேசத்தில் பணிபுரிந்த போது, அண்ணா ஹஜாரே வடிமைத்துள்ள ராலேக்கண் சித்தி கிராமத்திற்கு சென்று பார்த்துள்ளார். அவரது சமூக தொண்டும், ஊழலுக்கு எதிரான போராட்டமும் கருணாகரன் அவர்களை கவர, அண்ணா ஹஜாரேவின் சிந்தனையை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள தமிழ் மொழியில் பதிப்பிக்க அனுமதி பெற்றுள்ளார். இதையெல்லாம் அந்த புத்தகத்தை மேலோட்டாமாக படித்த பிறகுதான் எனக்கு தெரிந்தது. அடுத்த சில மாதம் கழித்து புதுக்கோட்டையில் இருந்து சர்மா என்பவர் அடிக்கடி பல செய்திகளை எங்கள் அலுவலகத்திற்கு சொல்வார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்கள். அது குறித்த தகவல் அடங்கிய சிறு கையேட்டை அனுப்பிருந்தார். ஏற்கனவே, அண்ணா ஹஜாரே குறித்து நான் அறிந்த தகவல்கள் என்னை ராலேக்கண் சித்தியை நோக்கி செல்ல தூண்டியது. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னேன். சிறிய செய்தியாக வேண்டாம், தொடர் எழுதும் அளவுக்கு தகவல்கள் வேண்டும். ஆகவே பத்து நாட்கள் கூட அங்கே இருந்துவிட்டு வாருங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார் இணையாசிரியர் ச.அறிவழகன். பத்து நாட்களுக்கு மேலாகும் என்பதால் நானே, புகைப்படம் எடுக்க முடிவு செய்து, கேமராவும் எடுத்துச் சென்றேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ராலேக்கண் சித்தியை நோக்கி எனது பயணம் புறப்பட்டது. முதலில் புனே சென்று. அங்கிருந்து சிறுர் என்ற நகருக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்தேன். காலை உணவாக சமோசாவும், சூடான டீயும் குடித்துவிட்டு பஸ் நிலையத்தில் உட்கார்ந்திருதேன். ஒரு மணி நேரத்திற்கு ராலேக்கண் செல்லும் சிவப்பு வண்ண பேருந்து வந்து நின்றது. வண்டியில் என்னையும் சேர்த்து பத்து பேர்தான் இருந்தோம். வறண்ட காற்று முகத்தில் அறைந்தது. அருகில் உட்கார்ந்திருந்த நபர்களை பார்க்கும் போதே தெரிந்தது, அந்த பகுதியில் நிலவி வரும் வறுமை. ஒரு மணி நேரத்தில் சின்ன, சின்ன குக்கிராமத்தை எல்லாம் கடந்து வண்டி ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் குளிர்ந்த காற்றும் தூரத்தில் பசுமையான வயல்களும் தென்பட்டன. அதுதான் ராலேக்கண் சித்தி என்று எனக்கு தெரிந்துவிட்டது. சுற்று வட்டார கிராமங்கள் வறட்சியில் முழ்கி கிடக்க, ராலேக்கண் சித்தி மட்டும் பசுமையில் கொழித்தது. சுமார் 2000 நபர்கள் வசிக்கும் சின்ன குட்டி கிராமம் அது. கிராமம் என்றால் ஏ.டி.எம், மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, அதி நவீன மருத்துவ மனை, ஹெலிக்காப்டர் இறங்க ஹெலி பேட்... என்று சகல வசதிகளும் உள்ள ஓரே கிராமம் ராலேக்கண் சித்திதான் என்றால் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். தினந்தோறும் புதிய மனிதர்கள் வந்து செல்வதால், கிராம தகவல் மையம் ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு சென்று நம்முடைய விபரத்தை சொன்னால், உடனே நம்மை அண்ணா ஹஜாரே இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இது அங்கு வாடிகையான நிகழ்வு. கிராமத்தை ஒட்டி இருந்த ஒரு மலை சரிவில் பள்ளி கூடம் போல சின்ன, சின்ன கட்டிடங்கள் இருந்தன. ஆனால் அது பள்ளி அல்ல என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
எனது பயண விபரம் எதுவும் அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது. நான் அவர் முன்னால் சென்று நின்ற போது, ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்றார். என்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். அருகில் இருந்த ஒரு அலுவரை அழைத்து ‘‘இவர் துணைவேந்தர் கருணாகரன்ஜி ஊரில் இருந்து வந்துள்ளார். நம்முடைய அதிதீ (விருந்தினர்) இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று சொன்னவர் ‘‘சாப்பிட்டுவிட்டீர்களா?’’ என்று கேட்டார். பதிலுக்கு காத்திராமல் சாப்பிட அழைத்துச் சென்றார் அண்ணா ஹஜாரே.
அங்கு போன பிறகுதான் தெரிந்தது, எனக்கு முன்பே 50 பேருக்கு மேல் சாப்பிட்டுக்கொண்டிந்தார்கள். தட்டை கையில் எடுத்துக் கொண்டு சென்ற போது, என்னுடைய தோற்றத்தை பார்த்தவுடன் ‘‘மதராஸி ஆவோஜி’’ என்று அன்புடன் அழைத்தார் சமையல்காரர். பெரிய, பெரிய கோதுமை ரொட்டி, நான்கும், சோயா குருமாவையும் ஊற்றினார். சென்னையில் உள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், அந்த குக்கிராமத்து ரொட்டியை போல ருசியை நான் இதுவரை ருசிக்கவில்லை. ஒரு வேளை தூய அன்புடன் பரிமாறும் போது, அந்த உணவுக்கு கூடுதல் சுவை வந்துவிடும் போல. இரண்டு, மூன்று நாட்களாக பயணத்தில் உணவு சரியாக சாப்பிடவில்லை. அந்த குறையை ஓரே வேளை உணவு போக்கியது. நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது, அண்ணா ஹஜாரே பக்கத்து கிராமத்துக்கு சென்றிருப்பதாக சொன்னார்கள். என்னுடன் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார்கள். வேறு வேலை இல்லை என்பதால் நானும் அவர்களுடன் ஐயக்கியமானேன். கிராம மக்களிடம் பணியாற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு அலுவலர்கள், ராணுவ வீரர்கள்... என சகலத்துறைச் சார்ந்தவர்களும் தரையில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு கிராமத்தை எப்படி வளம் நிறைந்த பகுதியாக மாற்றுவது என்று ஒருவர் இந்தி மொழியில் சுவையாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வெளியே வந்து பெயர் பலகையை பார்த்தேன். தேசிய நீர் பிடிப்பு பயிற்சி மையம் என்று எழுத்தப்பட்டிருந்தது. ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிர்சி எடுக்கவும், அண்ணா ஹஜாரேவின் பணி பற்றியும் அறிந்து கொள்ள ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு வந்து செல்கிறார்கள் என்ற செய்தி எனக்கு அப்போதுதான் தெரிந்தது.


அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் இருந்த சிறிய குன்றின் மீது ஏறினேன். அடுத்த பத்து நாட்களுக்கும் இந்த அழகிய கிராமத்தில்தான் இருக்க போகிறோம் என்று நினைத்த போது, மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்கு வலுசேர்ப்பது போல மாலை நேர மஞ்சள் நிற வானம் சிறந்த ஓவியம் போல மின்னிக்கொண்டிருந்தது.
-இன்னும் சொல்வேன்