வியாழன், 31 டிசம்பர், 2009

காய்க்காத விளாம் பழ மரம்... காய்த்து குலுங்குகிறது!

விவசாயக் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், ஆரம்பத்தில் விவசாயம் என்றால் எனக்கு வேப்பங்காயாக கசக்கும். இதற்கு காரணம், விவசாயம் செய்து பெரிய வருமானம் எதுவும் கிடைக்கவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னதை கேட்டததுதான். ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது வகுப்பறையில் இருந்து தப்பிக்க காடு, மலை என்று சுற்றுவதுண்டு. அப்படித்தான் ஒரு முறை ஆத்தூர் கோட்டையை சுற்றிப்பார்க்க திருநாவுக்கரசு என்ற நண்பனுடன் சென்றேன். காலை முதல் கோட்டையை சுற்றி, சுற்றி வந்தோம். முள் மறைவில் சாராயம் விற்பவர்களும், சீட்டு கட்டு விளையாடுபவர்களும்தான் கோட்டை அருகே இருந்தார்கள். அப்போது கோட்டை குறித்த வரலாறு எதுவும் தெரியாது என்பதால், ஏன் இங்கு வந்தோம் என்று சலிப்பு ஏற்பட்டது. சரி, என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு மதிய உணவு சாப்பிட இடம் தேடினோம். ‘‘எங்கள் மாமா தோட்டம் பக்கத்தில்தான் இருக்கிறது அங்கு போய் சாப்பிடலாம்’’ என்று அழைத்தான் திருநாவுக்கரசு. கோட்டையை ஒட்டியிருந்த அந்த தோட்டத்தில் அப்போது யாரும் இல்லை. பப்பாளி, கொய்யா... என்று பழ மரங்கள் இருந்தன. மதிய உணவை அப்படியே வைத்துவிட்டு பப்பாளி, கொய்யா பழங்களை ஒரு கை பார்த்துவிட்டு பம்பு செட்டில் ஒரு குளியல் போட்டுவிட்டு வீடு போய் சேர்ந்தோம்.
அடுத்த வாரமும் எங்கள் பயணம் அந்த தோட்டத்திற்கு செல்ல முடிவானது. ஆனால், இந்த முறை பம்பு செட் ஓடிக் கொண்டு இருந்தது. தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டுயிருந்தார் திருநாவுக்கரசின் மாமா கண்ணன். எங்களை கண்டவுடன் என்ன இந்த பக்கம் என்று விசாரித்தார். ஏதோ சாக்கு, போக்கு சொன்னோம். ‘‘சரி வந்து என்னோடோ தண்ணீ கட்டுங்க’’ என்றார். வயலில் மருந்து செடியான கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்திருந்தார்கள். அந்த காலக் கட்டத்தில் கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்த பலரும் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த மாமாவும் பணக்காரர்தான். ஆக, முறையாக விவசாயம் செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்று முதலில் அங்குதான் தெரிந்து கொண்டேன். இனி, ஊர் சுற்றுவதை விட பயிர்களை பக்கத்தில் இருந்து பார்ப்போம் என்று எங்கள் தோட்டத்திற்கு செல்ல தொடங்கினேன். பல ஆண்டு காலத்திற்கு முன்பு வெளிவந்து கொண்டுயிருந்த ‘மேழிச் செல்வம்’ என்ற விவசாய இதழை வாங்கி படித்தவர் எங்கள் தாதா. கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியவில்லை. ஆகவே, இரண்டு பால் மாடுகளை வளர்த்து வந்தார் தாதா. ஒய்வு கிடைக்கும் போது அவரிடம் விவசாயம் பற்றி விவாதிக்க தொடங்கினேன். அப்போது, எங்கள் தோட்டத்தில் சுமார் நாற்பது வயதுடைய விளா மரம் இருப்பதாகவும், அது இதுவரை ஒரு முறை கூட காய், காய்க்கவில்லை என்று சொன்னார். ஏற்கனவே அந்த மரத்தை பார்த்திருந்தாலும் அதன் வரலாறு தெரியாது. அடுத்த நாள் அந்த மரத்தை சென்று பார்த்தேன். நன்றாக வளர்ந்திருந்தது. ஆனால் மருந்துக்கு கூட காய்கள் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தேன். முருங்கை மரம் காய்க்கவில்லை என்றால் ஆணி அடிப்பதை பார்த்திருக்கிறேன். அது போல் ஏன் இந்த மரத்தில் அடிக்க கூட என்று யோசித்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். மாடுகளின் கால்களில் அடிக்கும், இரும்பு லாடம் கிடந்தது. அதை எடுத்து வந்து நடு மரத்தில் அடித்துவிட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த விளா மரத்தை தினமும் கவனிக்க தொடங்கினேன். என்ன ஆச்சர்யம் அடுத்து வந்த பருவத்தில் விளா மரத்தில் இரண்டு காய்கள் காய்த்திருந்தன. எல்லோருடமும் நான் லாடம் அடித்த கதையை தாதா சொல்லிக் கொண்டு இருந்தார். இரண்டு, மூன்று ஆண்டுகளில் விளாம் பழ மரம் காய்த்து குலுங்கியது. விவசாயத்தில் என் முதல் பரிசோதனை இந்த மரத்தில் இருந்துதான் தொடங்கியது. இப்போது இந்த மரம் ஆண்டுக்கு ஆயிரம் பழம் வரை காய்க்கிறது என்பதுதான் குறிப்பிட வேண்டிய செய்தி. இன்றும் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அடித்த இரும்பு லாடம் அந்த மரத்தில் அப்படியே இருக்கிறது. பின் நாட்களில் இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று ஆராய்ந்த போது, சில மரங்களுக்கு போதுமான சத்து கிடைக்கவில்லை என்றால் காய்க்காது என்று தெரிந்து கொண்டேன். அப்படி என்றால் எங்கள் தோட்டத்தில் இருந்த விளா நாற்பது ஆண்டு காலமாக இரும்பு சத்து இல்லாமல் இருந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

சனி, 28 நவம்பர், 2009

வசிஷ்ட்ட நதிக்கரையில் இருந்து...

வலைப்பூவில் எழுத முடிவு செய்தவுடன் வழக்கம் போல புத்தகம், பொழுதுபோக்கு, அரசியல், சினிமா... என பொது விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே, உலகின் உன்னத தொழிலான உழவு குறித்து எழுத திட்டமிட்டுள்ளேன். அப்படியானால் அது குறித்து எழுத எனக்கு என்ன தகுதி உண்டு?
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம்தான் எனக்கு சொந்த ஊர். ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் இருந்த நேரங்களைக் காட்டிலும், நரசிங்கபுரம் கிளை நூலகத்திலும், எங்கள் தோட்டத்திலும்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன். பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கேள்வி கேட்பார்கள். அதற்கு நூலகத்தில் படித்த புத்தகங்களில் இருந்து மேற்கொள் காட்டி பதில் சொல்லியிருக்கிறேன். சிலர் அதை ஊக்கப்படுத்தினார்க‌ள். சில ஆசிரியர்கள் அதிகப்பிரசங்கி என்று தேர்வின் போது மதிப்பெண்களில் கை வைத்தும் உள்ளார்கள். இப்படியாக போராட்டம் இருந்தபடியால் பள்ளி நமக்கு ஒத்துவராது என்று ஒதுங்கிக் கொண்டேன். அந்த காலக் கட்டத்தில் அதாவது 1998&ம் ஆண்டு, திருச்சியில் இருந்த லீசா தொண்டு நிறுவனம் (இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்டது) ‘உயிர்ச்சூழல் விவசாயம்’ என்ற பாடத்திட்டத்தை தொடங்கியது.அப்போது ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நிறைய நடந்து வந்தன. அதற்கு மூலக் காரணம், இரசாயன இடுப்பொருட்களும், விஷக்கொல்லிக்களும்தான். அதை தடுக்க வேண்டும் என்றால் இயற்கை விவசாய தொழில்நுட்பத்தை கையில் எடுக்க வேண்டும். அண்டை வீடான ஆந்திராவில் நடந்து வரும் நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்துவிடக்கூடாது. விவசாயிகளிகளிடம் இயற்கை விவசாயத் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக நம்மாழ்வார் போன்றவர்கள் திட்டமிட்டார்கள். அதன் விளைவாக உருவானதுதான் உயிர்ச்சூழல் விவசாயம் என்ற அந்த பாடத்திட்டம். ஆத்தூரில் இருந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர் வாயிலாக இந்த விஷயத்தை அறிந்து, பாடத்தில் இணைந்தேன். மாதம் தோறும் ஓமலூர் அருகே உள்ள குக்கிராமங்களில் பயிற்சி நடக்கும். அந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டும்தான் சின்ன பையன். அப்போது எனக்கு வயது 17. சுமார் ஒண்றை ஆண்டுகள் நடந்த அந்த பயிற்சியின் போது தமிழ்நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயப்பண்ணைகளை சுற்றி வந்தேன். அந்த நாட்களில் எனக்கு தெரியாது, மீண்டும் அந்த பண்ணைகளுக்கு பத்திரிகையாளனாக செல்ல போகிறேன் என்று. பயிற்சி முடித்த கையோடு தொண்டு நிறுவனத்தில் பணியில் சேர அழைப்பு வந்தது. நான் கற்ற விஷயங்கள் நாடு முழுவதும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு பத்திரிகை துறைதான் சரியான தளம் என்று முடிவு செய்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டே பாதியில் விட்ட கல்வியை கையில் எடுத்தேன். அதற்குள் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் சேரும்படி அழைப்பு வந்தது. வசிஷ்ட்ட நதியோரம் ஓடி விளையாடிய எனக்கு, வங்க கடலின் ஓசை வியப்பாகத்தான் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள பல பண்ணைகளுக்கு சென்றுள்ளேன். தமிழ்நாட்டில் என் கால் படாத விவசாயப்பண்ணைகள் குறைவு. இந்த பத்தாண்டுகளில் மூன்று விவசாய புத்தகங்களை எழுதியிருக்கிறேன். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழின் உதவி ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன். இதுதான் என் வாழ்க்கை சுருக்கம். இனி என்னை வியக்க வைத்த் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

புதன், 18 நவம்பர், 2009

வசிஷ்ட்ட நதியில் இருந்து... வங்க கடல் வரை

இப்போது நினைத்தாலும் எனக்கு ஆச்சர்யமாகதான் இருக்கிறது